Tuesday, 24 May 2011

அது..

•••


இல்லாதவொன்றை
இருக்கும் என்கிறாய்
இல்லையென்கிறேன் நான்
இருந்தே தொலைக்கிறது அது.


 ••••

Monday, 16 May 2011

நதி !!!





பால்கேனியில் நின்று
தலை சீவுகிறாய்
கீழே விழுகின்றன மலர்கள்.

•••

சீரகச்செயினை
நீ வாயில் கடிக்கும்
தருணமெல்லாம்
தங்கத்தின் விலை உயருகிறது.

•••

ஓடும் அந்த நதியில் 
ஒவ்வொரு கல்லாய் தூக்கிப்போடுகிறாய்..
காலால் நீரை எத்துகிறாய்...
கைகளால் தள்ளுகிறாய்..
மீன்களைப் பிடிக்க தாவணி ஏந்துகிறாய்...
நீர்சுழிகளைக்காட்டி அழகாய் சிரிக்கிறாய்..


ஒரு மானசரோவர் உருவாகிறது.

••••


Tuesday, 5 April 2011

மகரந்தம்






பனியில் நனைந்த
பூக்களையே
வெரித்துப்பார்க்கிறாய்

அவைகளும் அப்படியே
பார்க்கின்றன

பூகோள விதியில்
ஒரு மாற்றம்

உன் மகரந்தம் அதனோடு.




பாவம்



‘அவல நெனச்சிட்டு
உரல இடிக்காத’

தவறான வேலைக்கு
அம்மா இப்படித்தான் திட்டுவாள்

நான்
அவளை நினைத்து
உரலானது 
அவளுக்கும்கூட தெரியாது...
பாவம்



Monday, 4 April 2011

அழுகிறேன் நான்




உனக்கு பிடித்தப் பாடலை 
திரும்பத்திரும்ப  கேட்கிறேன். 
அன்றைய மழைநின்ற இரவிலும்கூட. 
காத்திருந்த கண்களைபோல 
மீண்டும் அழத்தொடங்கியது 
அது.
 
****

அழுகின்ற போதெல்லாம்
அந்தக் குழந்தையை
முத்தமிட்டே கொஞ்சுகிறாய் நீ..
அழுகிறேன் நான்





Tuesday, 22 March 2011

இனியநாள்


பட்டாம்பூச்சி விழித்தபோதுதான்
நீயும் எழுந்தாய்

அது சிறகு விரித்தது
நீயும் சோம்பல் முறித்தாய்

இந்த நாள் இனிய நாள்.

(நன்றி ஆ.வி)


••••••••••••••••
 
நனைதலென்பது

பள்ளிச்செல்லும் சிறுவனை
கூடவே அழைத்துச்செல்கிறாய்
கூடவே வருகிறது மழையும்

தாவணி முனையில்
அவனையும் அணைத்துக்கொள்கிறாய்

நனைகிறேன் நான்.